தேனி மாவட்டம் மங்கலதேவி கண்ணகி கோயில் விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் தேனி மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சித்தலைவர்கள் தலைமையில் நடைபெற்றது

தேனி மாவட்டம்
மங்கலதேவி கண்ணகி கோயில் விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் தேனி மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சித்தலைவர்கள் தலைமையில் நடைபெற்றது
தேனி மாவட்டம், தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா (01.05.2026) அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு, தேக்கடியில் உள்ள பெரியார் புலிகள் காப்பக மூங்கில் காடு அரங்கத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு ரஞ்ஜீத்சிங், இ.ஆ.ப.. அவர்கள் மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தினேஷன் சேருவாட், இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் தலைமையில் இடுக்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சாபூ மத்யூ இ.கா.ப. அவர்கள், சார் ஆட்சியர் திரு.அனுப்கார்க், இ.ஆ.ப. அவர்கள் ஆகியோர் முன்னிலையில் இன்று (17.04.2026) நடைபெற்றது.
மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி தினத்தன்று தமிழக-கேரள மக்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டு 01.05.2026 அன்று நடைபெற உள்ளதையொட்டி, திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்ய இருப்பதால் தமிழக மற்றும் கேரள பக்தர்கள் குமுளியில் இருந்து கோவிலுக்கு செல்லுவதற்கு ஏதுவாக போக்குவரத்து வசதி, சுகாதாரம், குடிநீர், தற்காலிக பந்தல்கள் மற்றும் கழிப்பிட வசதி, பாதைகள் செப்பனிடுதல் போன்ற பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.

மேலும், கோயிலுக்கு வருகை தருகின்ற பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவது. தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது குறித்து. சுகாதாரத்துறை மற்றும் தீயணைப்புத்துறை, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அலுவலர்களுடன் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

பசுமை சோதனை சாவடிகள் அமைத்து, பக்தர்கள் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டி பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்கக் கூடாது. வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க உரிய இடங்களில் விழிப்புணர்வு பதாகைகளை வைத்தல் வேண்டும். மேலும், கோடைகால வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கூடுதலாக குடிநீர், உணவு, கழிவறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்துதர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக போதிய அளவில் காவலர்களை சுழற்சி முறையில் நியமனம் செய்யப்பட உள்ளார்கள்.

கடந்தாண்டைப்போன்று இந்தாண்டும், பக்தர்கள் பாதுகாப்புடன் எவ்வித சிரமமின்றி மங்கலதேவி கண்ணகி கோயிலில் வழிபாடு செய்து திரும்பும் பொருட்டு தேவையான போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்பட உள்ளது. மேலும் கோயிலுக்கு செல்லும் வாகனங்களுக்கு அனுமதிச்சீட்டு வழங்கும் வகையில், வாகன தரச்சான்றிழ் (Vehicle Stability Certificate) வழங்கப்படவுள்ளது.மேலும், பளியன்குடி வழியாக வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான கூடுதல் மருத்துவ முகாம்கள், பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்திடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே வழிகாட்டி பலகை வைக்கப்பட உள்ளளது. அவசர நிகழ்வுகளுக்காக சுகாதாரத்துறையின் மூலம் மருத்துவ குழுவினருடன் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் மூலம் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பயிற்சி பெற்ற மீட்பு குழுவினர் பணியமர்த்தப்பட உள்ளார்கள்.கண்ணகி கோயில் சித்ராபௌர்ணமி திருவிழாவினை சிறப்பாக கொண்டாடிட பக்தர்கள் அனைவரும் இரு மாநில மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலுக்கு முழு ஒத்துழைப்பினை வழங்கிட வேண்டும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.இக்கூட்டத்தில், துணை இயக்குநர்கள் திரு.விவேக் பரஸ்நாத் யாதவ் இ.வ.ப., (ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்), திருமதி ஆர்.லட்சுமி இ.வ.ப., (பொ) (பெரியார் புலிகள் காப்பகம்), மாவட்ட வன அலுவலர் திரு.கிரண், இ.வ.ப. மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இணை இயக்குநர் மரு.கலைச்செல்வி, துணை இயக்குநர் மரு.வரதராஜன், செய்தி மக்கள் தொடர் அலுவலர் திரு.ஏ.எடிசன், வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.மாணிக்கம் மற்றும் வருவாய்த்துறை, வனத்துறை, போக்குவரத்துத் துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட இரு மாநில அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

